மார்க்கமா மூர்க்கமா?
சமீபத்தில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் நடந்த சம்பவம் முஸ்லிம்களில் சிலர் சென்று கொண்டிருக்கிற தவறான திசையைச் சுட்டுவதாக இருக்கிறது. கோபம் ஒரு இயற்கையான உணர்வு. அதற்குச் சரியான வடிகால் வேண்டும். உங்களுக்கு நியாயமாகக் கோபம் வருவதை மற்றவர் புரிந்து கொள்ளுமாறு செய்யலாம். ஆனால் கோபம் என்ற உணர்ச்சிக்கு நாம் அடிமையாகி விடாமல் அதைச் செய்ய வேண்டும். உதாரணமாக இறுதித்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கோபம் வந்துள்ளது. அவர்கள் முகத்தில் அது தெரியும். ஆனால் அது வார்த்தையிலோ அல்லது செயலிலோ கட்டுப்பாடின்றி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அவர்கள் அனுமதித்ததே இல்லை.
திருவிடைச்சேரி கிராமத்தில் இரண்டு மனித உயிர்கள் ஒரு கொலைகாரனின் வெறிக்கு பலியாகியுள்ளன. இன்னும் சில உயிர்கள் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றன. கொலை செய்தவரின் பெயர் ஹாஜி முகம்மது என்றும் ஹெச். முஹம்மது என்றும் சொல்லப்படுகிறது. முதலில் ஒளிந்து கொண்டிருந்த அவர் பின்பு சிதம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார் என்றும், ஜமாஅத் தலைவர் முஹம்மது இஸ்மாயீல், கமிட்டி உறுப்பினர் ஹெச். முஹம்மது ஆகிய இருவரும் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர் என்பதும் தகவல்.
தொழுகை முறை சம்பந்தமாகவும், பொதுஇடத்தில் தனியாக தொழுகை நடத்தியதாலும் ஊர் ஜமா’அத்தார்களுக்கும் தவ்ஹீத் ஜமா’அத்தார்களுக்கும் ஏற்பட்ட விவாதங்களின் இறுதிக்கட்ட விளைவாக இக்கொலைகள் நடந்துள்ளன என்று திட்டவட்டமாகக் கூறுகிறது நக்கீரன் இதழ். ஒரு பக்கம் தவ்ஹீத் ஜமா’அத்தினர் என்றால் இன்னொரு பக்கம் பெரும்பான்மையாக இருக்கும் சுன்னத் ஜமா’அத்தினர் என்பது சொல்லாமலே விளங்கக்கூடியது. ’’இரு பிரிவினருக்கு இடையில் நடந்த சம்பவம்’’ என்று பத்திரிக்கைகளைப் போல நாம் இதைப் பூசி மொழுக வேண்டியதில்லை.
ஆனால் தவ்ஹீத் ஜமா’அத் இதை மறுத்துள்ளது:
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும். துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ, உறுப்பினரோ, அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக்கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல. அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால், உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போதுதான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம் — என்று மறுப்பில் அது கூறியிருக்கிறது.
அவசர அவசரமான அதன் மறுப்பு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதோடு, சுடப்பட்டவர்களில் மூன்று ஹிந்துச் சகோதரர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி லாஜிக் பேசுகிறது டி.என்.டி,ஜே. இவ்விதமான ’’அறிவார்ந்த’’ விளக்கங்கள் பொதுவாக குற்றவாளிகளின் திறமையை நிரூபிப்பதற்குப் பயன்பட்டன என்பது வரலாறு காட்டும் உண்மை. மகாத்மா சுடப்பட்ட பிறகு கோட்சே எங்கள் கட்சியைச் சேர்ந்தவரே அல்ல என்றுதான் ஆர்.எஸ்.எஸ்.கூடச் சொன்னது.
உண்மையில் தவ்ஹீத் ஜமா’அத்தாருக்கு இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றால் அது நிச்சயம் மகிழ்ச்சிக்குரியது. டி.என்.டி.ஜே.யின் மறுப்பு உண்மையாக இருக்க வேண்டும் என்பதே என் அவாவும் துஆவும். ஆனால் காலம்தான் அதை நிரூபிக்க வேண்டும் ஏனெனில் இதுவரை கிடைத்த ஆதாரப்பூர்வமான, நேரடிக்கள ஆய்வின் அடிப்படையிலான தகவல்கள் டி.என்.டி.ஜே.க்கு எதிராகவே இருக்கின்றன. எனக்குக் கிடைத்த தகவல்களில் சில:
1. பிரச்சனைக்கு அடிப்படைக் காரணம் ரொம்ப காலமாக சுன்னத் வல் ஜமா’அத்தாருக்கும் தவ்ஹீத் ஜமா’அத்தாருக்கும் இடையே நிலவி வந்த கொள்கை ரீதியான முரண்பாடுகள் (எனக்குத் தெரிந்தவரை இக் ‘கொள்கை’ ரீதியான விவாதங்கள் எப்போதுமே, தொழும்போது விரலை ஆட்டுவதா நீட்டுவதா, தராவீஹ் தொழுகைக்கு எட்டு ரக்’அத்தா இருபதா என்பது போன்ற, சமுதாய ஒற்றுமைக்கு எந்த வகையிலும் உதவாத விஷயங்கள்மீதுதான் நடந்து வந்துள்ளன).
2. இதுவரை கைதாகியுள்ள 14 பேர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள்.
3. அப்துல் ரஹீம் என்ற தவ்ஹீத் ஜமா’அத் உறுப்பினரின் மனைவி கமருன்னிஸா என்பவர் தெருவில் நின்று கொண்டு தொழும்போது தொப்பி அணிவது தொடர்பாக சுன்னத் ஜமா’அத்தினரை திட்டிக் கொண்டிருந்தார் என்பதுதான் பிரச்சனையின் ஆரம்பம். (தொப்பி போட்டுக் கொண்டு தொழ வேண்டியதில்லை என்று தொடங்கியவர்கள், இனி தலையே இல்லாமல்தான் தொழவேண்டும், ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் அப்படித்தான் கூறுகின்றன என்று ’ஆதாரம்’ காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அல்லாஹ்வுக்கு கை, கால் உண்டு என்ற ஆராய்ச்சியில் இப்போது இருக்கிறார் பிஜே. கை, கால் உண்டு என்றால் ‘அது’வும் இருக்க வேண்டுமல்லவா?).
4. சுன்னத் ஜமா’அத்தினர் தொழும் பள்ளிவாசலுக்குள் நோன்புக் கஞ்சி குடிக்க தவ்ஹீத் ஜமா’அத்தின் உறுப்பினர் சிலர் குத்புதீன் என்பவரின் தலைமையில் வந்தது, சுன்னத் ஜமா’அத் தலைவரை தரக்குறைவாகப் பேசியது போன்றவை பிரச்சனையை வலுக்கச் செய்தன.
இதில் குத்புதீன் என்பவர் சுன்னத் ஜமா’அத்தில் இருந்தவராம். மிகச்சமீபத்தில்தான் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு தவ்ஹீதில் இணைந்திருக்கிறார். (தவ்ஹீத் என்ற வார்த்தையே ஒரு மூளைச்சலவைதான். எல்லா முஸ்லிம்களும் தவ்ஹீத் ஜமா’அத்தினர்தான் அடிப்படையில். அதேபோல எல்லா முஸ்லிகளும் நபிவழியைப் பின்பற்றுகின்ற சுன்னத் வல் ஜமா’அத்தினர்தான்).
கஞ்சி எல்லாருக்கும் பொதுவானதுதான் என்று சொல்லி சிலருடன் பள்ளிவாசலுக்குச் சென்றிருக்கிறார். போனோமா, கஞ்சி குடித்தோமா, மக்ரிப் தொழுதோமா என்று வந்திருந்தால் பிரச்சனை ஏற்பட்டிருக்க வழியே இல்லை. ஆனால் பிரச்சனை ஏற்பட்டதை வைத்துப் பார்க்கும்போது, சுன்னத் ஜமா’அத்தைச் சேர்ந்த சமுதாயத்தையே கஞ்சி காய்ச்சி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சென்றிருந்ததாகத் தெரிகிறது. அவர் ஜமா’அத் தலைவரை மரியாதைக் குறைவாகப் பேச, பதிலுக்கு தலைவரின் ஆதரவாளர்கள் பேச, எனக்கு யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டீர்களா என்ற ரீதியில் சவால் விட்டுவிட்டு அவர் வெளியேறியிருக்கிறார். இது நடந்தது மாலை நேரத்தில்.
5. அதன் உச்சகட்டமாக, இரவு எட்டறை மணி வாக்கில் நான்கு அம்பாசிடர் கார்களிலும், ஒரு க்வாலிஸ் காரிலும் (அடி)ஆட்கள் பறந்து வந்துள்ளனர். அதில் க்வாலிஸில் இருந்தவர்தான் ஹாஜி முஹம்மது.
6. வந்த வேலையை ’முடித்து’ விட்டுக் கிளம்பும்போது க்வாலிஸின் மனசாட்சி படுத்துக்கொண்டது. காரைக் கிளப்ப முடியாததால், வேறு வகையில் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். க்வாலிஸின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து கொண்டுள்ளது. அவர் என்ன செய்வார்? எப்போதும் தன் காரைத்தான் ஹாஜி முஹம்மது வாடகைக்கு எடுப்பார் என்றும், அப்படித்தான் அன்றும் தான் வந்ததாகவும், வந்து பார்க்கும்போதுதான் அடிதடி, துப்பாக்கிச் சூடு என்ற பிரச்சனைகள் எல்லாம், எனக்கு மற்றபடி ஒன்றும் தெரியாது என்று கூறினாராம். அவரை வைத்து மற்றவர்களை அடையாளம் காணும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.
சரி, கோபத்தைப் பற்றியும் கொலை செய்வதைப் பற்றியும் இஸ்லாம் என்ன சொல்கிறது?
- புளிக்காடி (வினிகர்) அல்லது சோற்றுக் கற்றாழை (ஆலோ) தேனைக் கெடுத்துவிடுவது போல, கோபம் ஈமானைக் கெடுத்துவிடுகிறது.
- உங்களில் பலவான் மல்யுத்த வீரனல்ல. கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனே வீரன்.
- கோபத்தை நோக்கி மெதுவாகச் செல்லக் கூடியவர்களே உங்களில் சிறந்தவர்கள்.
- கோபம் ஷைத்தானிடமிருந்து வருகிறது. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன். நெருப்பு நரகிலிருந்து வருகிறது. நெருப்பை தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டும். எனவே உங்களுக்குக் கோபம் வரும்போது வளூ செய்து கொள்ளுங்கள்.
- தனது நாவாலும், கையாலும் இன்னொரு முஸ்லிமுக்குத் தீங்கு செய்யாதவனே முஸ்லிம்.
இவையெல்லாம் நபிமொழிகள். அவைகளின் அர்த்தங்களை என்னுடைய வார்த்தைகளில் எளிமையாகச் சொல்லியுள்ளேன். எந்த ஹதீது நூலில் இருந்து எடுத்தேன் என்பதை வேண்டுமென்றே நான் இங்கே குறிப்பிடவில்லை. ஒரு புத்தகத்தின் பொருட்டு சமுதாயத்தில் ஒற்றுமை குலைவதற்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. மல்லிகைப் பூவின் நறுமணத்துக்கு விளம்பரம் தேவையில்லை அல்லவா?
ஆனால் திருமறையின் வசனத்துக்கு மட்டும் நான் அத்தியாயம் மற்றும் வசனத்தின் எண்களைக் கொடுத்துள்ளேன். ஏனென்று உங்களுக்கே தெரியும். அது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. திருமறை மிகத் தெளிவாகக் கூறுகிறது:
ஒரு மூமின் இன்னொரு மூமினைக் கொல்லக் கூடாது (4:92).
வேண்டுமென்றே ஒரு மூமினை இன்னொரு மூமின் கொலை செய்வாரேயானால் அவருக்கான இடம் நரகம்தான் (4: 93).
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அநியாயமாகக் கொல்வானாகில், அவன் மனித குலத்தையே கொலை செய்ததற்கு ஒப்பாகும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக்க் காப்பாற்றி விட்டால், அவன் மனித குலத்தையே காப்பாற்றியதற்கு ஒப்பாகும் (5:32).
இந்த மூன்று ஆயத்துகளின் தமிழாக்கத்தையும்கூட நான் என்னுடைய மொழியில்தான் சொல்லியுள்ளேன். படிப்பவர்களுக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் மனதில் வைத்து.
எனக்குள் சில எண்னங்களும் கேள்விகளும் எழுகின்றன:
1. கருத்து மோதல் என்றால் கைகலப்பில் போய்தான் முடிந்திருக்க வேண்டும். ஆனால் கொலைகாரர் துப்பாக்கியோடு சென்றிருக்கிறார். அதாவது, தன் கருத்தை எதிர்ப்பவர்களையெல்லாம் காலி செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே போய் இருக்கிறார். எனவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு வன்முறை. இதன் அடிப்படைக் காரணம் தொழும் இடம், தொழும் முறை ஆகியவை பற்றியதுதான் எனில், இதைவிடக் கேவலான ஒரு சூழ்நிலையை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க முடியாது.
2. இரு குழுக்களுக்கிடையே உள்ள யார் சரி, யார் பெரியவன் என்ற ’’ஈகோ’’ பிரச்சனைக்கு மார்க்கமும் மனித உயிர்களும் பலியாகியுள்ளன. இது தொடர்ந்து பல்வேறு தளங்களில் சில ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
3. இப்படிக் குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைப் பற்றியோ, பொறுமை, சகிப்புத்தன்மை, ஒற்றுமை போன்ற பேண வேண்டிய குணங்களைப் பற்றியோ கவலை இல்லை.
4. இஸ்லாமோ, குர்’ஆனோ, ஹதீஸோ, உண்மையோ இவர்களுக்கு முக்கியமல்ல, தான் சரி என்று காட்ட ஒரு முட்டு தேவை. அது குர்’ஆனாக, ஹதீஸாக, அல்லாஹ்வாக, ரஸூலாக யாராக, எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். எல்லாமே, எல்லாருமே துணைக்குத்தான்.
ஒரு மூமின் இன்னொரு மூமினைக் கொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை தன் வார்த்தைகளால்கூட காயப்படுத்தக் கூடாது என்று பெருமானார் கூறுகிறார்கள். அப்படியானால் கொலை செய்தவனுக்கு
- இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை
- அல்லது தெரிந்ததைப் பற்றிக் கவலை இல்லை.
- புனித ரமலான் மீது எந்த மரியாதையும் இல்லை. தனது கருத்தும், தனது துப்பாக்கியும்தான் முக்கியமாக இருந்திருக்கிறது.
- இப்படிப்பட்ட தாதாக்களை உறுப்பினர்களாக வைத்துக் கொள்ளும் இயக்கம் எப்படிப்பட்டது?
- இஸ்லாத்தை நுக்தா, நுக்தாவாக அளந்து பார்த்து, ஆராய்ச்சி செய்து பேசியும் எழுதியும் வருகின்ற சகோதரர்கள் இந்தச் சம்பவம் தாங்கள் சார்ந்த குழுவினரால்தான் நடத்தப்பட்டது என்று நிரூபணமானால் என்ன சொல்லப் போகிறார்கள்?
- இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியும் மதியாமலும், உருப்படாத காரணங்களுக்காக ஒரு முஸ்லிம் சகோதரனை இன்னொரு முஸ்லிம், சகோதரன் வெட்டியும், சுட்டும் கொல்வான் என்றால், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையின்மீது கோபப்பட நமக்கு என்ன உரிமையிருக்கிறது?
- பால் தாக்கரேயையும், மோடியையும் குற்றம் சொல்ல என்ன முகாந்திரமிருக்கிறது? (அவர்கள் செய்வதெல்லாம் சரி என்று சொல்லவரவில்லை. எல்லா வன்முறைகளும் கண்டிக்கவும், தண்டிக்கவும் தக்கவைதான். இதில் சந்தேகமே வேண்டாம்).
மனசாட்சி உள்ள சகோதரர்களைப் பார்த்து நான் இந்த வேண்டுகோள்களை வைக்கிறேன்.
சகோதர்கள் இனியாவது இது பற்றிச் சிந்திக்க வேண்டும். மூர்க்கர்களிடமிருந்து மார்க்கத்தை மீட்டெடுக்க வேண்டும். குழு மனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டும். ஒரு தலைவரைப் பின்பற்ற வேண்டுமெனில் அது பெருமானார் (ஸல்) அவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள எந்த ஆலிமும் அவசியமில்லை. நாமே படித்துப் புரிந்து கொள்ளலாம். அரபி மொழி ஆலிம்களின் தனிச் சொத்தல்ல. சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மனித நேயம் தழைக்க வேண்டும் என்று செய்யப்படுகின்ற எந்தக் காரியத்துக்கும் அல்லாஹ்வின் ’ஹிதாயத்’ எனும் வழிகாட்டுதல் நிச்சயம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.
நன்றி: நமது முற்றம், டிசம்பர் 2010.