கொஞ்ச நாளாக மக்கள் உரிமை பத்திரிக்கையில் வந்துகொண்டிருந்த என் நபிமொழிக்கவிதைகளை அவ்வப்போது பதிவிட முடியவில்லை. இப்போது கூகுள் பக்கம் மூலமாக உங்களோடு இங்கே. படித்துவிட்டு எழுதுங்கள்:
193
உடம்பு முடியாதவரை
உண்ணுங்கள் என்று சொல்லி
வற்புறுத்தாதீர்கள்
குடியுங்கள் என்று சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்
அருந்தவும் உண்ணவும் அவருக்கு
அல்லாஹ்விடமிருந்து வரும் என்று
அண்ணல் நபிகள் சொன்னார்கள்
(இப்னு மாஜா. உக்பா பின் அமீர் அல் ஜுஹானி: 04 – 3444)
194
தேனும் திருமறையும்
தித்திக்கும் எப்போதும்
நிவாரணங்கள் அவைகளாலே
சித்திக்கும் எப்போதும்
(இப்னு மாஜா. அப்துல்லாஹ்: 04 – 3452)
195
அபூஹுரைராவும் அண்ணல் நபியும்
அதிகாலையில் எங்கோ கிளம்பினார்கள்
தொழுதுவிட்டு அமர்ந்துகொண்டார் அபூஹுரைரா
அவரைப் பார்த்த அண்ணல் நபிகள்
வயிற்று வலியா என்று வினவினார்கள்
ஆமாம் என்றார் அபூஹுரைரா
தொழுங்கள் எழுந்து தோழரே
தொழுகை உங்களை குணப்படுத்தும் என
தாஹா நபி சொன்னார்கள்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 04 – 3458)
196
காய்ச்சல் பற்றிய பேச்சு வந்தது
காசிம் நபியிடத்தில்
தீபோன்ற அந்த தகிப்பை ஒருவர்
திட்டித் தீர்த்தார்
சுரத்தை என்றும் சபிக்காதீர்கள்
சுத்தப்படுத்துகிறது உங்களை அது
இரும்பிலிருந்து அழுக்கை
நெருப்பு நீக்குவதுபோல
நரக நெருப்பு கொஞ்சம்
நரம்பினில் ஏறுவதே காய்ச்சலாகும்
நெருப்பென்பதால் அதனை
நீரைக்கொண்டு அணையுங்கள் என
நேசநபி சொன்னார்கள்
(இப்னு மாஜா. அபூஹுரைரா, ஆயிஷா: 04 – 3469, 3471)
197
இரண்டு மகள்களுடன்
அன்னை ஆயிஷாவைப் பார்க்க
அன்று ஒரு பெண் வந்தார்
மூன்று பேரீச்சம் பழங்களை
மூவருக்கும் கொடுத்தார்
முஸ்தஃபாவின் மனைவி ஆயிஷா
ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தை
அச்சிறுமிகள் உண்டபின்
மூன்றாவது பழத்தையும்
இரண்டாகப் பிளந்து
இருவருக்கும் கொடுத்தார்
அந்த அன்பு அன்னை
அதுபற்றி அண்ணலிடம்
ஆயிஷா சொன்னபோது
ஆச்சரியம் எதற்கு ஆயிஷாவே
அன்பால் அந்தத் தாய்
அப்பொழுதே அடைந்துவிட்டாள்
அழகிய சொர்க்கம் ன
அண்ணல் நபிகள் சொன்னார்கள்
(இப்னு மாஜா. ஆயிஷா: 05 – 3668)
198
மக்களுக்கு இடையூறாக
பாதையின் குறுக்கே கிடந்த
மரக்கிளை யொன்றை
ஓரமாய் எடுத்து
ஒதுக்கிப் போட்டான் ஒருவன்
அதனால் அவனுக்கு
ஆண்டவன் கொடுத்தான்
அழகிய சொர்க்கம்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 05 – 3682)
199
உங்கள் நாயன்
கருணயாளன் கொடையாளன்
ஏக்கத்தோடு
ஏந்திய கைகளை
ஆசையோடு
அகல விரிக்கப்பட்ட கைகளை
விருப்பங்கள் நிறைவேறவேண்டி
விரியத்திறந்த கைகளை
வெறுமையாக அனுப்ப
வெட்கப்படுகிறான்
(இப்னு மாஜா. சல்மான்: 05 – 3865)
200
அல்லாஹ் உங்கள்
சொரூபத்தையோ
செல்வத்தையோ பார்ப்பதில்லை
நெஞ்சம் நெய்ததையும்
நேர்படச் செய்ததையும் மட்டுமே
நாயன் பார்க்கிறான்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 05 – 4143)
201
பசியோடு காலையில்
பறந்து செல்லும் பறவைகள்
வீங்கிய வயிற்றோடு
வீடு திரும்புகின்றன மாலையில்
பறவைக்குக் கொடுத்த
பரோபகாரியான
படைத்தவன் மீது நம்பிக்கை வைத்தால்
உங்களுக்கும் கொடுப்பான்
உண்மையாளன் என
உமரிடம் சொன்னார்கள்
உத்தம நபி
(இப்னு மாஜா. உமர்: 05 – 4164)
202
அல்லாஹ் தன் அளப்பரிய
அன்பினால் அருளியுள்ள
அருட்கொடைகள் இரண்டினையும்
அநாவசியமாக செலவு செய்கின்றனர்
அறிவுகெட்ட மனிதர்கள்:
ஆரோக்கியம் ஒன்று
அவகாசம் இன்னொன்று
உடல் நலத்தையும்
உள்ள நேரத்தையும்
உருப்படியாய் செலவழிக்காதவர்
உருப்படவே மாட்டார் என
இப்னு அப்பாஸ் அவர்களிடம்
இறுதி நபி கூறினார்கள்
(இப்னு மாஜா. அப்துல்லாஹ் பின் சயீத் பின் அபூ ஹிந்த்: 05 – 4170)
203
பெருமை எனது போர்வை
மகத்துவம் எனது மேலாடை
என்னோடு போட்டி போடும்
எவனாக இருந்தாலும்
எறிவேன் நரகில் என்று
இறைவன் சொன்னதாக
இறுதித்தூதர் சொன்னார்கள்
(இப்னு மாஜா. அபூஹுரைரா: 05 – 4174)
204
ஒவ்வொரு மதத்துக்கும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு
நன்மார்க்கம் இஸ்லாத்தின் சிறப்பு
நாணமாகும் என்று
நவின்றார்கள் நமது நபி
(இப்னு மாஜா. இப்னு அப்பாஸ்: 05 — 4182)
205
அடுத்தவர் பார்க்கிறார் என்பதனால்
அழகிய முறையில் தொழுவதைப்போல
ஆண்டவனை ஏமாற்ற முயலும்
அசிங்கமான காரியமானது
அந்தரங்க இணைவைப்பாகும் என
அருமை நபி கூறினார்கள்
(இப்னு மாஜா. அபூ சயீத்: 05 – 4204)
206
சின்ன சாட்டையின் அளவிலான
சொர்க்கத்தின் இடமானது
சுந்தர பூமியைவிடவும்
அதில் உள்ள அத்தனையையும்விட
அழகானது
(இப்னு மாஜா. சஹல் இப்னு ச’அத். 05 – 4330)
207
காலைத்தொழுகயின் நேரமென்ன
காசிம் நபி அவர்களே என்று
சந்தேகம் கேட்டார்
ஒரு சஹாபா
அமைதியாக இருந்தார்கள்
அண்ணல் நபிகள்
அடுத்தநாள் விடியலில்
அதிகாலைத் தொழுகையினை
இருட்டு கலையுமுன்னே
இறுதிநபி தொழுதார்கள்
அடுத்த நாள் அதிகாலை
விடியலின் வெளிச்சத்தில்
வாஞ்சை நபி தொழுதுவிட்டு
சந்தேகம் கேட்டவர் எங்கே என்று
சஹாபாக்களைக் கேட்டார்கள்
இங்கே உள்ளேன் இறுதித்தூதரே என
அங்கே இருந்த அவரும் சொன்னார்
இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும்
இடையில் உள்ளது
மூலவனை வணங்குவதற்கான
முதல் தொழுகை நேரம் என
முஸ்தஃபா சொன்னார்கள்
வார்த்தைகளால் விளக்குவதைவிட
வாழ்க்கையால் விளக்குவதையே
விரும்பினார்கள் வேதநபி
(முவத்தா. அ: அதா பின் யாஸர். 01)
208
என்னருமைத் தோழர்களாகிய நீங்களும்
எனக்குப் பின் வரஇருப்பவர்களும்
என் சகோதரர்களே
கௌதர் எனும் தடாகத்தில் நான்
காத்திருப்பேன் அவர்களுக்காக
என்றார்கள் ஏந்தல் நபி
உங்கள் காலத்துக்குப் பின்னால்
உலகில் வர இருப்பவர்களை
உங்கள் சகோதரர் என
உணர்ந்துகொண்டதெப்படி
உம்மி நபி அவர்களே என
உண்மைத்தோழர்கள் கேட்டனர்
வெள்ளை நிறக்குதிரைகளை
வேறுநிறக் குதிரையில் இருந்து
வேறுபடுத்திப் பார்க்க முடியாதா என
வேத நபி கேட்டார்கள்
முடியும் எங்கள் முஸ்தஃபாவே என்றார்கள்
முத்திரை நபியின் தோழர்கள்
அதேபோல
மறு உயிர்ப்பு செய்யப்படும் அந்த
மறுமை நாளின்போது
தொழுகைக்கு முன்னர் தம் உடலை
தண்ணீரால் சுத்தம் செய்த என்
சகோதரர்கள் அனைவருக்கும்
பாசமுகம் ஒளிவீசும்
பாதங்கள் பளபளக்கும்
அதைவைத்து அவர்களை நான்
அடையாளம் கண்டுகொள்வேன் என
அஹ்மது நபிகள் அறிவித்தார்கள்
(முவத்தா. அ: அபூஹுரைரா: 55)
209
வஞ்சகனின் வாளொன்றால்
வீரர் உமர் காயப்பட்ட இரவன்று
நான் சென்று அழைத்தேன்
காலைத்தொழுகைக்கு
கலீஃபா உமரை
தொழுகையைத் தவறவிடுபவனுக்கு
தீமைதான் என்ற உமர்
தொழ வந்தார் அப்போதும்
குத்தப்பட்ட காயத்திலிருந்து
குருதி வழிந்தோடியது
கலீஃபா உமர் தொழுதபோது
(முவத்தா. அ: மிஸ்வார் இப்னு மக்ரமா 79)
210
அவ்வப்போது நீங்கள்
ஆண்டவனை உங்கள் வீட்டு
அறைகளிலும் தொழுதுகொள்ளுங்கள்
இல்லத்திலும் தொழுதுகொள்ளுங்கள்
இறைவனை அவ்வப்போது
இல்லையெனில்
மண்ணறைகளாக மாறிவிடும்
மனதுக்குப் பிடித்த இல்லங்கள்
கல்லறைகளாக மாறிவிடும்
கட்டப்பட்ட வீடுகள் என
காசிம் நபி கூறினார்கள்
(புகாரி. அ: இப்னு உமர்: 01 – 432)
மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
Dear Rumi, Very nice and inspiring blog. Recently I read your Alpha Meditation book and it helped me to improve. I like to share the wonderful knowledge with all with your blessings.
Thank you.
Please feel free to share if you have any articles about this, I will be happy to share in my blog.🙂
நிச்சயம் ஐயா. நல்லது செய்யுங்கள். என் பிரார்த்தனைகள்
நன்றி. இறையருள் முன்னிற்குமாக…